அகதிகளென்ற போர்வையில் போராளிகள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை

தமிழக கரையோரப் பொலிஸாரின் ரோந்து அதிகரிப்பு; கருணாநிதி இலங்கையில் மோதல்கள் அதிகரித்திருப்பதால் அகதிகளென்ற போர்வையில் போராளிகள் தமிழகத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்திருப்பதாக முதலமைச்சர் மு.கருணாநிதி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். பொலிஸார், காவல் பிரிவினர், தீயணைக்கும்படைப் பிரிவினருக்கான மானியம் வழங்கும் சட்டமூலப் பிரேரணை மீது தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றுகையிலேயே கருணாநிதி இதனைத் தெரிவித்துள்ளார். கடத்தல்காரர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெடிமருந்துகள், இரும்புக்குண்டுகள், மருந்துகள் மற்றும் பொருட்களை இலங்கைக்குக் கடத்த முயற்சிப்போருக்கு எதிராகத் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தியிருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடத்தலில் ஈடுபட்டதாக இந்த வருடத்தின் முதல் 3 மாதகாலப்பகுதியில் 15 இலங்கைத் தமிழர்கள் உட்பட 36 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டபின் 21 ஆயிரம் பேர் அகதிகளாகத் தமிழகத்திற்கு வந்துள்ளனர். 73,087 இலங்கைத் தமிழர்கள் மாநிலத்தின் 25 மாவட்டங்களில் 177 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மூதூர் படுகொலை விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் இராஜதந்திரிகள் சந்திப்பு

மூதூர் படுகொலை தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவை வியாழக்கிழமை பிற்பகல் இராஜதந்திரிகள் சந்தித்துள்ளனர். இந்த ஆணைக் குழுவின் விசாரணைகள் திடீரென வழமையை விட இரு மணி நேரம் முன்னதாக முடிவடைந்தது. இதையடுத்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ரொபேட் பிளேக் மற்றும் கனேடிய தூதரக சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட இராஜதந்திரிகள் குழுவொன்று சந்தித்துள்ளது. தற்போது நடைபெறும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் சாட்சியங்களின் பாதுகாப்பு குறித்தும் இதன் போது இராஜதந்திரிகள் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மூதூரில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டினிக்கு எதிரான அமைப்பைச் (ஏ.சி.எவ்) சேர்ந்த 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளில் இதுவரை இந்த ஆணைக் குழு முன் 10 இற்கும் மேற்பட்டோர் சாட்சியமளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்

அம்பாறை நகர மத்தியில் வெள்ளிக் கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பை எவர் செய்திருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இந்த சம்பவமானது பலத்த சந்தேகத்துக்கு இடமளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அம்பாறையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து ஐ.தே.க.வின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்த நாயக்க எம்.பி.யினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; அம்பாறை நகர மத்தியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக ஐ.தே.க. கவனத்தை செலுத்தியுள்ளது. கிழக்கு மாகாண பாதுகாப்புக்கென பெரும் பங்காற்றிய விஷேட அதிரடிப் படையினரை பிள்ளையானின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பல முகாம்களிலிருந்து அரசாங்கம் அகற்றியது. இதற்கிடையே கிழக்குத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசாங்க அமைச்சர்களின் ஆதரவாளர்கள் போல அங்கு சென்று சில நபர்களின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டது. அத்துடன், கிழக்கு மாகாணத்தை மீட்க முடிந்ததாக கூறி அரசாங்கம் விழாக்களை நடத்தியமையும் இங்கு நினைவு கூரப்பட வேண்டும். நிலைமை இவ்வாறிருக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக பலத்த சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது. இந்த குண்டு வெடிப்பை எவர் நடத்தியிருந்தாலும் அதை ஐ.தே.க. வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஆடம்பரக் காரில் வந்து பெண்களிடம் சங்கிலி அறுக்கும் கொள்ளையர்கள்

வெள்ளவத்தைப் பகுதியில் சம்பவங்கள் அதிகரிப்பு கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கார்களில் வந்து பெண்களின் தங்கச் சங்கிலியை அறுத்துச் செல்வோர் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மாலை வெள்ளவத்தை பசல்ஸ் ஒழுங்கையில் வந்து கொண்டிருந்த பெண் ஒருவரின், பெறுமதிமிக்க தங்கச் சங்கிலி காரொன்றில் வந்தவர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆடம்பரமான காரில் வந்த ஒருவர், கார் சற்றுத் தூரம் சென்று நிற்க அப்பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடிச் சென்று காரில் ஏறி மறைந்துவிட்டார். சங்கிலியை பறிகொடுத்த பெண் பின்னர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார். ஏற்கனவே, இதுபோன்ற பல முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகக் கூறிய பொலிஸார், காரின் இலக்கத் தகட்டு எண் தெரிந்தால் அதனைத் தேடிப்பிடிக்க முடியுமெனக் கூறியுள்ளனர். அத்துடன், இவ்வாறொரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆடம்பரக் காரொன்றை தாங்கள் பிடித்துள்ளதாகக் கூறி அந்தக் காரைக் காண்பித்த பொலிஸார், அதுவொரு டாக்டரின் காரெனவும் அதனை `கெப் சேவை’ (வாடகைக்கார்) நடத்துவோரிடம் அவர் ஒப்படைத்த போது, இவ்வாறான கொள்ளையொன்றில் ஈடுபட்டு அதன் இலக்கத்தகட்டு எண்ணைக் கண்டுபிடித்து காரைத் தாங்கள் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேநேரம், வெள்ளவத்தை, தெகிவளை பகுதியில் ஆடம்பரக் கார்களில் `ரிப்-ரொப்’ உடையணிந்து தனியார் தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வருவோர் மிகத் தந்திரமாக அங்கிருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தொடர்பாகவும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு

மக்கள் மத்தியில் அச்சம் மன்னார் நானாட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டோரின் விபரங்களை படையினர் சேகரித்து வருவதால் அப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருந்த காலத்தில் இப் பகுதியைச் சேர்தவர்கள் விடுதலைப் புலிகளின் மக்கள் படையில் பயிற்சி பெற்றதாகக் கூறியே அவர்களின் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் தற்போது படையினர் ஈடபட்டுள்ளனர். இது தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள பல கிராமங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டே மக்கள் படைமுகாம்களுக்கு அழைக்கப்பட்டு விபரங்கள் திரட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய வியாழக்கிழமை கொக்குப் படையானைச் சேர்ந்தவர்கள், இலந்தைமோட்டை பகுதியிலுள்ள 21-5 படையணித் தலைமையகத்திற்கு வரவழைக்கப்ட்டு விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. நீலமடு மற்றும் பொற்கேணி கிராம மக்கள் இந்தப் படைமுகாமுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே படையினர் இவ்வாறனதொரு நடவடிக்கையில் ஈடுபட்டபோது அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து அந்த நடவடிக்கையை கைவிட்டபடையினர் தற்போது மீண்டும் இந்த விபரச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கனடாவில் உலகத்தமிழர் இயக்க அலுவலகம் முற்றுகை!! (விரிவான செய்தி)

ltte-canada.jpgகனடாவில் 2006ம் ஆண்டு புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதையடுத்து ரொரன்ரோ மற்றும் மொன்றியலல் உள்ள உலகத்தமிழர் இயக்க அலுவலகங்கள் ஆர்.சி.எம்.பி அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டது அங்கிருந்து பல ஆவணங்கள் பொலிசாரால் எடுத்துச செல்லப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு கடந்த வாரம் ஆர்.சி.எம்.பி அதிகாரி கோப்ரல் ஷேர்லி டேவர்மன் அவர்களால் பெடரல் நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி மூலம் ஆதாரங்களுடனும் சாட்சியங்களுடனும் சமர்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை வைத்து மொன்றியலில் இயங்கி வந்த உலகத்தமிழர் இயக்க அலுவலகத்தை ஆர்;.சி.எம்.பி அதிகாரிகள் முற்றுகையிட்டு அதன் சொத்துக்களையும் வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளனர். உலகத்தமிழர் இயக்கம் புலிகளின் வெளிநாட்டுக்கிளை என்பதையும்; நிரூபித்துள்ளனர். 2006ம்ஆண்டு பொலிசார் மொன்றியல் அலுவலகத்தை முற்றுகையிட்டதை அறிந்த ரொரன்ரோ உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்கள் இரவோடு இரவாக இரண்டு வான்களில் முக்கிய ஆவணங்களை ஏற்றிக்கொண்டு ஓரு வாகனத்தை வெலஸ்லி அன்ட் பார்லிமென்ட் சந்திப்பில் உள்ள தமிழர் வர்த்தக நிலையமான அம்பாள் ஸ்ரோர் இலும் மற்ற வாகனத்தை தமிழர் தொழில்நுட்ப கல்லூரியிலும் கொண்டு சென்று பதுக்க முற்பட்டபோது ஓரே நேரத்தில் பொலிசாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்கள் மொன்றியல் அலுவலகம் பொலிசாரினால் முற்றுகையிடும்போதே ரொரன்ரோவில் உள்ள உலகத்தமிழர் இயக்க அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள தொழிற்சாலை ஒன்றினுள் இருந்து உலகத்தமிழர் இயக்க அலுவலகத்தை பொலிசார் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
(Read more . .)

மூன்று பிள்ளைகளின் தந்தை புத்தளத்தில் கடத்தல்

புத்தளத்தில் நவரட்ணம் பாலச்சந்திரன் (38 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை வியாழக்கிழமை பகல் இனம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக் குழுவிடமும் முறையிடப்பட்டுள்ளது. தெல்லிப்பழை-கட்டுவனைச் சேர்ந்த இவர் இடம்பெயர்ந்து புத்தளம் சோல்ற் முகாமில் வசித்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் வெளியே சென்றவேளை வானில் வந்தவர்கள் இவரைக் கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் 10 ஆம் திகதி சனிக்கிழமை திட்டமிட்டபடி இடம்பெறுவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவிலான பொலிஸாரும், இராணுவத்தினரும்,அதிரடிப்படையினரும் விஷேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்துக் கல்லூரிக்கு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருமலை வீதி, புகையிரதநிலையவீதி, டெலிகொம்வீதி, மகஜனாக் கல்லூரி வீதி ஆகியன பாரிய இரும்புக்கேடர்களால் மூடப்பட்டு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைவிட மேலதிகமாக மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்குச் செல்லும் வாகனங்களும் கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு வரும் வாகனங்களும் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கப்பட்டு பலத்த சோதனையின் பின்னரே பயணம் தொடர அனுமதிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிள்களில் செல்வோரும் நிறுத்தப்பட்டு சோதனையின் பின்னரே பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுவதுடன், மட்டக்களப்பு நகர் கேந்திர நிலையங்கள், முக்கிய சந்திகளில் படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிண்ணியாவில் 36 நிலையங்களில் வாக்களிப்பு 36,077 பேர் வாக்களிப்பதற்கு தகுதி

நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிண்ணியாவில் 36077 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இது மாகாணத்தின் மொத்த வாக்காளர்களில் 3.7 வீதமாகும். கிண்ணியாவில் 36 நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறுகிறது. கிண்ணியாவில் ஐந்து வேட்பாளர்களுக்கிடையே போட்டி நிலவுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், எம்.ஏ.எம். மஹ்ரூப், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக எஸ்.எல்.எம். ஹஸன் மௌலவி, சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ், டாக்டர் ஏ.எம். லாபிர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் கிண்ணியாவில் சுமார் 75 வீதமானோர் வாக்களித்துள்ளனர். அதன்படி இத்தேர்தலில் சுமார் 27 ஆயிரம் பேர் வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. கிண்ணியாவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எம். முபாரக் தெரிவித்தார். இதேவேளை, சகல வாக்காளர்களும் தமது வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்றும் நேர காலத்துடன் சென்று வாக்களிக்குமாறும் மக்கள் மன்றம் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.

கறுக்காய்குளத்தில் நீண்டநேரம் கடும் மோதல் அதிக இழப்புகள்; பரஸ்பரம் இருதரப்பும் தெரிவிப்பு

மன்னார் கறுக்காய் குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சியைத் தாங்கள் முறியடித்துள்ளதாகவும் இதில் 30 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், ஐந்து படையினர் சடலங்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பாரிய படைநகர்வு முயற்சி குறித்து அவர்கள் கூறுகையில்; கறுக்காய் குளம் பகுதியில் பலத்த ஆட்லறி, மோட்டார் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதலை நடத்தியவாறு டாங்கிகள் சகிதம் பெருமெடுப்பில் பாரிய படைநகர்வொன்று மேற்கொள்ளப்பட்டது. தரைப் படையினருக்கு ஆதரவாக விமானப் படை குண்டு வீச்சு விமானங்களும் கடும் தாக்குதலைத் தொடுத்தன. இதற்கெதிராக விடுதலைப் புலிகளும் கடும் பதில் தாக்குதலைத் தொடுத்தனர். முன்னேற முயன்ற படையினர் மீது கடும் ஷெல் தாக்குதலும் மோட்டார் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதையடுத்து இரு தரப்புக்குமிடையே உக்கிர சமர் நடைபெற்றது. காலை 8 மணிவரை நடைபெற்ற இந்தக் கடும் சமரில் 30 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதும் மிகப் பெருமளவான படையினர் படுகாயமடைந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட படையினரில் ஐவரது சடலமும் பி.கே.எல்.எம்.ஜி. 2 , ஏ.கே.எல்.எம்.ஜி. - 3, ரி 56-2 ரகத் துப்பாக்கிகள் - 5 மற்றும் பெருமளவிலான இராணுவப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இத் தாக்குதலில் இராணுவ ட்ரக் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் படையினரால் இழுத்துச் செல்லப்பட்டது. பலத்த இழப்புகளுடன் படையினர் தங்கள் பழைய நிலைகளுக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. (Read more . .)

நேர காலத்துடன் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்

கிழக்கு மாகாண சபைக்கு சனிக்கிழமை நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில்; கிழக்கு மாகாணத்தின் மாகாண சபைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு 10 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை 1,070 வாக்கெடுப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளது. இவ்வாக்கெடுப்பின்போது வாக்களிப்பதற்கு தகைமை பெற்றுள்ள வாக்காளர்களுக்கு அவர்களது வாக்கெடுப்பு நிலையம், வாக்கெடுப்புத் தினம் என்பவற்றை அறிவித்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வுத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை வாக்கெடுப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வது உங்களுக்கும் வாக்கெடுப்பு நிலைய அலுவலர்களுக்கும் வசதியாகிருக்கும். ஆயினும், வாக்களிப்பதற்கு அது கட்டாயமான ஆவணமொன்றல்ல. (Read more . .)

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்; ஹக்கீம் நம்பிக்கை

கிழக்குத் தமிழர்களின் இதயமாக விளங்கும் மட்டக்களப்பு நகர எல்லைக்குள் அரசின் வெற்றிலைச் சின்னத்தை வெற்றியடைய வைத்து தமிழர்களின் சுயகௌரவத்துக்கு பங்கத்தை ஏற்படுத்திய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீண்டும் அவ்வாறானதொரு அவமானத்தை ஏற்படுத்த முனைகின்றனர். எனவே, நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எமக்கு நல்லதொரு தீர்ப்பை தருவார்களென்ற நம்பிக்கை தமக்குண்டென ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் திருமலை மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது; கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எல்லா இடங்களிலும் அவர்களது படகுச் சின்னத்தில் போட்டியிட்ட போதும், மட்டக்களப்பு மாநகர சபைக்கு மாத்திரம் அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டார்கள். மட்டக்களப்பு மாநகர சபை கிழக்கின் முழு தமிழர்களுக்கும் இருக்கின்ற ஒரே ஒரு மாநகர சபையாகும். அதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஏன் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதைப் பற்றி மட்டக்களப்பு தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் என அக்கூட்டத்தில் நான் பேசினேன். (Read more . .)

கணவனை இழந்த பட்டதாரி குடும்பப் பெண் வெள்ளை வானில் சென்றோரால் கைது

பிரதி அமைச்சரிடம் முறையீடு கொழும்பிலிருந்து வெள்ளை வானில் மட்டக்களப்பு தேத்தாத்தீவுக்கு சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கணவனை பறிகொடுத்த பட்டதாரி குடும்பப் பெண்ணை கைது செய்து கொழும்புக்கு கொண்டுவந்துள்ளதாக சிறிய தாயார் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடமும் மனித உரிமைகள் ஆணைக்குழு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கும் புகார் செய்துள்ளார். சண்முகநாதன் கலைவாணி (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தாயே கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிய தாயாரான சுப்பிரமணியம் லெட்சுமிபிள்ளை புகார் செய்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது; கடந்த 25.04.2008 இரவு வெள்ளை வானில் வந்தவர்கள் தங்களை பொலிஸார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு தொலைபேசி இலக்கத்தை கலைவாணியிடம் காண்பித்து சீராள சிங்கம் என்பவருடன் கதைத்தது தொடர்பாக விசாரித்தனர். கலைவாணி வீட்டில் அவரும் வேறு சிலரும் அகதிகளாக தங்கியிருந்தனர். தற்போது அவர்களை விசாரித்த பின்னரே குறிப்பிட்ட அந்த நபருடன் தொலைபேசியில் கதைத்ததை கலைவாணி ஒப்புக்கொண்டதையடுத்து இரவோடு இரவாக அவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அழைத்துச்சென்று தடுத்துவைத்துள்ளது. கலைவாணி கணவரை இழந்தவர். 15 வயதில் மகள் ஒருவர் இருக்கின்றார். கலைவாணி வீட்டில் அகதிகளாக இருந்தவர்கள் உறவினர்கள் அல்ல. அவர்கள் தற்போது எங்குள்ளார்கள் என்று தெரியாது. இந்த நிலையில், கலைவாணியை கைது செய்தது ஏன் என்று புரியவில்லை. இவ்விடயம் தொடர்பாக பிரதி அமைச்சர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு இயக்குநரிடம் தொடர்புகொண்டுள்ளார்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள 19 மலையக இளைஞர்களையும் விடுவிக்க ஏற்பாடு

பிரதி அமைச்சர் தெரிவிப்பு விசாரணைக்குப் பின்னர் விடுவிப்போம்’ என்று கூறி கண்டி மெதமாநுவர வேவதன்னை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பிலியந்தலை பகுதியில் இரும்புப் போத்தல் கடை நடத்தி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்து, கல்கிசை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக உறவினர்கள் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளனர். வேவதன்னை தோட்டத்தைச் சேர்ந்த மெய்யன் அமிர்தலிங்கம், செய்யன் சண்முகநாதன், மெய்யன் பாலச்சந்திரன், ராமலிங்கம் சிவகுமார், கதிர்வேல் சபாபதி, மாரிமுத்து ராஜேந்திரன், சண்முகம் மோகன்ராஜ் என்பவர்களே கடந்த 26.04.2008 இரவு பிலியந்தலை பொலிஸாரினால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களின் சகோதரியான மெய்யன் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். (Read more . .)

சமரசிங்க தலைமையிலான குழு மே 11 இல் ஜெனீவா பயணம்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் விசேட அமர்வில் கலந்து கொள்வதற்கென இடர் முகாமைத்துவம், மனித உரிமைகள் தொடர்பான அமைச்சரான மகிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளது. இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் வட்டாரங்களும் இதை உறுதிப்படுத்தின. மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியாக காலத்துக்கு காலம் மேற்கொள்ளப்படுகின்ற மீளாய்வில் (Universal Periodic Review) கலந்து கொள்வதற்காகவே இலங்கை பிரதிநிதிகள் குழு ஜெனீவா செல்கிறது. இந்த அமர்வின் போது, எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கையில் மனித உரிமைகள் விவகாரங்கள் பற்றி 3 மணித்தியாலங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இதன் போது, இலங்கை அரசாங்கம் சார்பான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட, ஐ.நா.மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரங்கள் பற்றி கூடி ஆராயப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.

கிழக்கு செல்வதற்கு வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான செய்திகளைத் திரட்டுவதற்கு அந்த மாகாணத்துக்குச் செல்வதற்கு வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவிடம் முறைப்பாடு செய்துள்ளது. அங்கு சென்ற ஏ.பி. செய்திச் சேவையின் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு வருமாறு அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் செயலாளர் சேனகவத்தேகெதரவும் அதன் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னகோனும் கையொப்பமிட்டு தேர்தல் ஆணையாளருக்கு வியாழக் கிழமை அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; இலங்கையிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் செய்திகளைத் திரட்டுவதற்கு தடைகள் போடப்பட்டு வருவது குறித்து தங்களின் நேரடிக் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றோம். (Read more . .)

இடைத்தேர்தலில் நவாஷ் போட்டியிடாமைக்கு பெனாசிர் கட்சியின் அணுகுமுறையே காரணம்

பாகிஸ்தான் இடைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் போட்டியிடாமைக்கு பெனாசிர். கட்சியினரின் அணுகுமுறை ஏமாற்றமளிப்பதே காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் விரைவில் நடக்க இருக்கின்ற இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் போட்டிடுவதில்லையென முடிவு எடுத்து இருக்கிறார். கூட்டணி கட்சியான பெனாசிரின் மக்கள் கட்சித் தலைமையின் போக்கு மீது ஏற்பட்ட அதிருப்தியால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார். பாகிஸ்தானில் பாராளுமன்றத்துக்கும் 4 சட்டசபைகளுக்கும் பல்வேறு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இடைத்தேர்தலில் பாராளுமன்றத்துக்கு போட்டியிட நவாஸ் ஷெரீப் முதலில் திட்டமிட்டு இருந்தார். (Read more . .)

பேருவளை துவக்குச்சூட்டில் இருவர் பலி; இருவர் படுகாயம்

பேருவளை காலிவீதியில் புதன்கிழமை இரவு வானொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். களுத்துறைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவரை வானொன்றில் ஏற்றிச்செல்கையிலேயே அந்த வான் மீது பலத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது அதில் பயணம் செய்த இருவர் வானினுள்ளேயே கொல்லப்பட்டனர். மற்ற இருவரும் படுகாயமடைந்த நிலையில், பின்னர் களுத்துறை நாகொடை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னர் இடம்பெற்ற கொலையொன்றின் தொடர்ச்சியாகவே புதன்கிழமை இரவு இந்தத் துப்பாக்கிச் சூடுகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; புதன்கிழமை இரவு களுத்துறை பகுதியில் இரு கோஷ்டிகளிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து அவருடன் வந்தவர்கள் வாடகைக்கு வானொன்றை அமர்த்தி காயமடைந்தவரை காலி நோக்கிக் கொண்டு சென்றுள்ளனர். இவ்வேளையில் அந்த வானை மோட்டார் சைக்கிளொன்றில் துரத்திச் சென்ற இருவர், பேருவளை பாகல்கந்த பகுதியில் வைத்து வானின் மீது பலத்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இதில் இருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் நாகொடை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பல்வத்தையைச் சேர்ந்த சமன்ஹெட்டி ஆராச்சி, காலி தடல்கையைச் சேர்ந்த கஹவவிதானகே காமினி என்பவர்களே கொல்லப்பட்டவர்களாவர். விஜயதாச டி சில்வா கஹவிதானகே சாந்த ஆகியோரே காயமடைந்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா செக்கடிபுலவில் வர்த்தகர் சுட்டுக்கொலை

வவுனியா செக்கடிப்புலவு பகுதியில் வியாழக்கிழமை முற்பகல் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். செக்கடிப்பிலவு செல்வாநகரில் வைத்து இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நெளுக்குளம் 4 ஆம் கட்டையில் வர்த்தக நிலையத்தை நடத்திவரும் பாஸ்கரன் என்ற வர்த்தகரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இது குறித்து மாவட்ட நீதிபதிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சடலத்தை வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவருமாறு நீதிபதி பொலிஸாரை பணித்திருந்தார். கடந்த சில தினங்களாக வவுனியாவில் இடம் பெற்று வரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா.செயலாளர் நாயகத்துடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனை புதன்கிழமை நியூயோர்க்கில் சந்தித்து பேச்சு வார்த்தை மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பாகவும் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார். கிழக்கில் ஜனநாயகத்தை மீள நிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வடக்கிற்கென விஷேட செயலணிப் பிரிவை ஏற்படுத்தி அபிவிருத்தியை துரிதமாக முன்னெடுக்கவுள்ள அரசின் செயற்பாடுகள் குறித்தும் போகொல்லாகம இச்சந்திப்பின் போது பான் கி மூனிடம் விபரித்திருக்கின்றார். கிழக்கிலிருந்து புலிகள் வெளியேற்றப்பட்ட பின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் பிரகாரம் கிழக்கு மாகாண மக்களுக்கு வலுவூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் இடம்பெறுவது குறித்தும் போகொல்லாகம கூறியிருக்கின்றார். இலங்கையில் சமாதானமும் ஸ்திரத் தன்மையும் ஏற்படுவதற்குத் தான் வாழ்த்துவதாக இச்சந்திப்பின் போது பான் கி மூன் அமைச்சர் போகொல்லாகமவிடம் கூறியுள்ளார். அத்துடன், நியூயோர்க்கில் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள புத்தாயிரமா மாண்டு அபிவிருத்தி இலக்கு தொடர்பான ஐ.நா.உயர் மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வாரென எதிர்பார்ப்பதாகவும் பான் கி மூன் தெரிவித்திருக்கின்றார். மேலும் எதிர்வரும் ஜூன் 3-5 இல் உலக உணவு அமையத்தில் உயர் மட்டச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு விஷேட அழைப்பை பான் கி மூன் விடுத்திருக்கின்றார். உலக உணவுப் பாதுகாப்பு தொடர்பான புதிய முன் முயற்சிகள் தொடர்பாக ஆராயவே இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Page »